மூடு

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்

வ. எண் வரலாற்றுச் சின்னத்தின் பெயர் அமைவிடம்
1 டெல்லி நுழைவு வாயில் ஆற்காடு
2 பீரங்கி ஆற்காடு
3 மசூதி ஆற்காடு
4 கோட்டைப்பகுதியில் உள்ள குளங்கள் ஆற்காடு
5 வட கிழக்கில் அமைந்த கோட்டையின் வெளிப்புறச் சுவர் முப்பதுவெட்டி
6 குடைவரை, சமண தீர்த்தங்கரர் சிற்பம் விளாப்பாக்கம்
7 சோளிங்கர் குளக்கரையில் காணப்படும் கல்வெட்டு சோளிங்கர்
8 ஒற்றை பாறையில் அமைந்த குடைவரை மகேந்திரவாடி
9 கோனார் கோவில் திருமால்பூர்

விளாப்பாக்கம்

விளாப்பாக்கம்

விளாப்பாக்கம்

திருப்பாண்மலை இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் சின்னமாகும். இது ஆற்காட்டிலிருந்து தென்மேற்கே 6-கி.மீ தூரத்தில் விளாப்பாக்கம் என்ற கிராமத்தின் எல்லைப்பகுதியில் ஆற்காடு – கண்ணமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

இங்கு பல்லவர் கால குடைவரை ஒன்று குன்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஆறு முழு தூண்களையும், இரு அரை தூண்களையும் கொண்டு குடைவரை குடையப்பட்டுள்ளது. இக்குடைவரையின் மேல்பகுதியில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று குடையப்பட்டுள்ளது. இக்குன்றின் மேல் சமண படுக்கைகள் சிலவும் அக்கால செங்கல் கட்டிட பகுதிகள் சிலவும் சிதைந்த நிலையில் உள்ளது. அழகிய அம்பிகை யக்ஷியின் உருவம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பம் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டு கூறுகின்றது. இங்கிருந்த சமண முனிவர்களுக்கு இதன் அருகிலேயே கூராம்பாடி என்ற ஊரை இறையிலியாக கொடையாக அளித்ததை இங்குள்ள மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. மேல்குன்றிலும் இக்கல்வெட்டின் அருகிலும் தீர்த்தங்கரர் சிற்பங்கள் அழகுற புடைப்புச்சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கே சொடுக்கவும்

மகேந்திரவாடி

மகேந்திரவாடி

மகேந்திரவாடி குடைவரை

அரக்கோணம் வட்டம், மகேந்திரவாடியில் அமைந்துள்ள மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரை குறிப்பிடத்தக்க ஓர் வரலாற்றுச் சின்னமாகும். இச்சின்னத்தினை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகின்றது.

இக்குடைவரை கோயில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட மிகவும் பழமையான குடைவரைகளில் ஒன்றாகும். இது கி.பி.600 முதல் 630-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரையாகும். இக்குடைவரைக்கு மகேந்திர விஷ்ணுகிருகம் என்று மகேந்திர பல்லவன் பெயரிலேயே பெயரிடப்பட்டுள்ளதை இங்குள்ள மகேந்திர வர்மன் காலத்து கிரந்த கல்வெட்டு நமக்கு தெளிவாக்குகின்றது.
வெட்டவெளியான ஓர் இடத்தில் தனியாக ஒரு சிறுபாறையை குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். காண்போரை கவரும் வண்ணம் இரு முழுதூண்களுடன் இரு அரைத்தூண்களுடனும் மிகவும் எளிய முறையில் இக்குடவரை குடையப்பட்டுள்ளது. தூண்களில் போதிகை மட்டுமே குடையப்பட்டுள்ளது மிகவும் எளிமையாக உள்ளது.
புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கே சொடுக்கவும்

ஆற்காடுக் கோட்டை

ஆற்காடுக் கோட்டை

ஆற்காடுக் கோட்டை

ஆற்காட்டில் நவாப்சாதத்துல்லாகான் கட்டிய அரண்மனையின் இடிபாட்டு பகுதிகளும், தூர்ந்துவிட்ட அகழியும், மசூதிகளும் பிற கட்டிட பகுதிகளும் மிகவும் பழமையானவைகளாகும். இவைகள் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் செங்கற்களாலும், சுதையாலும் கட்டப்பட்டவையாகும். அவைகள் தற்பொழுது பெரும்பகுதி அழிந்துவிட்டன. கோட்டைப்பகுதியில் உள்ள குளம், தொழுகை செய்த மசூதி, அதன் அருகில் உள்ள கிணறு போன்றவையே எஞ்சியுள்ளன. இக்கோட்டைப்பகுதி சுமாா் 10 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ளது. பாலாற்றிலிருந்து மசூதிக்கு அருகில் உள்ள குளத்திற்கு தண்ணீர் வந்து மீண்டும் பாலாற்றிற்கே செல்லும் வண்ணம் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது போன்றத்தக்க ஓர் அமைப்பாகும். இக்கோட்டைக்கு ஆலம்பனா கோட்டை என்று பெயர்.

டெல்லி வாயில், ஆற்காடு

டெல்லி வாயில், ஆற்காடு

டெல்லி வாயில், ஆற்காடு

கி.பி.18-ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டின் நவாப் உரிமைக்காக சந்தாசாஹிப்பிற்கும் முகமதுஅலிக்கும் நடந்த போரில் ஆங்கிலேயர் முகமது அலி சார்பாக போரில் நுழைந்தனர். 26.8.1751-ஆம் நாளன்று முகமது அலியின் சார்பாக ஆங்கிலப்படைகள் ஆற்காட்டில் நுழைந்து போட்டியாளரான சந்தாசாகிப்பை கோட்டையை விட்டு விரட்டி இராபட் கிளைவ் தலைமையில் வெற்றிகண்டனர். இராபட் கிளைவின் இவ்வெற்றியே பின்னாளில் ஆங்கிலேயர் ஆதிக்கம் இந்தியா முழுவதும் பரவி இந்தியாவை ஆங்கிலேயர் கைப்பற்றக் காரணமாக அமைந்தது. எனவே தனது வெற்றியின் நினைவாக இராபட் கிளைவ் கட்டிய இக்கட்டடமே டெல்லி வாயில் என அழைக்கப்படுகின்றது. இந்த டெல்லி வாயில் நுழைவாயில் தரைத்தளம், முதல்தளம் என இரு பகுதிகளை கொண்டது. தரைத்தளத்தின் நுழைவுவாயிலின் இரு புறமும் ஆயுதகிடங்காக பயன்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் காற்றோட்டமாக வீரர்கள் தங்கவும், அங்கிருந்தே அவர்களின் எதிரிகளின் வருகையையும் நடமாட்டத்தையும் கண்காணிக்க வசதியாகவும், பீரங்கிகள் பொருத்தி பீரங்கி தாக்குதல் நடத்த ஏதுவாகவும் உள்ளவாறு இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உறுதியான செங்கல் மற்றும் சுதைகளை கொண்டு சுமாா் 4 அடி அகலத்தில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது போற்றத்தக்கதாகும்.

புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கே சொடுக்கவும்