மூடு

கைத்தறி மற்றும் துணி நூல் துறை

கைத்தறி மற்றும் துணிநூல் துறை

முகக் குறிப்பு

கைத்தறி நெசவுத் தொழிலானது 65 இலட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உள்ளடக்கிய, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொழிலாகும். பாரம்பரியம் மற்றும் நேர்த்தியான கைவினை, நெசவு ஆகியவைகளின் அடிப்படையில் தமிழ்நாடானது கைத்தறி தொழிலில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. பண்டைக் காலந்தொட்டே நேர்த்தியான நெசவுக்கு புகழ்பெற்றது கைத்தறி நெசவாகும். தமிழகத்தை பொறுத்தமட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றுவதுடன் 3.19 இலட்சம் நெசவாளர்கள் உள்ளடக்கிய 1.89 இலட்சம் நெசவாளர் குடும்பங்கள் கொண்டது கைத்தறி தொழிலாகும். கைத்தறி நெசவில் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், திரைசீலைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் மற்றும் லுங்கி இரகங்களை நெசவு செய்வதில் உன்னதமான இடமாக தமிழ்நாடு திகழ்கிறது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், மொத்தமுள்ள 11,000 கைத்தறி நெசவாளர்களில் 10,000 நெசவாளர்கள் கூட்டுறவு அமைப்பின்கீழ் உள்ளது தனிச்சிறப்பாகும்.

துணித்தொழிலை பொறுத்தமட்டில் இந்தியாவின் பழமைவாய்ந்த, பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும் தொழிலாகும். தமிழ்நாடு அரசானது துணித்தொழில் வளர்ச்சிக்கு, உற்பத்தி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதில் பெரும் பங்காற்றி வருகிறது. கைத்தறி மற்றும் துணித் தொழிலின் வளர்ச்சிக்கு தமிழக அரசிற்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருவது கைத்தறி மற்றும் துணிநூல் துறையாகும். இத்துறையானது, உற்பத்தி திறனை அதிகரித்து, வடிவமைப்பில் புதுமைகளை புகுத்தி, நெசவாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கும் பல நலத்திட்டங்களை கொண்டு சேர்த்து நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதுடன், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக திகழ்கிறது.

துறையின் செயல்திட்டங்கள்

இந்திய அரசு, துணித்தொழில் கொள்கை மூலம் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பல்வேறு நிதியுதவியினை அளிப்பதிலும், சங்கங்களின் வளர்ச்சிக்கு வித்திடுவதற்கும் பெரும்பங்காற்றி வருகிறது. அரசாணை நிலை எண். 70, கைத்தறி, கைவினை, துணிநூல் மற்றும் கதர்த்துறை, நாள் 9.8.1985 மற்றும் அரசாணை நிலை எண். 158, கைத்தறி, கைவினை, துணிநூல் மற்றும் கதர்த்துறை, நாள் 27.11.1985-ன்படி வேலூர், கைத்தறி மற்றும் துணிநூல் சரகமானது 1.3.1986 முதல் புதியதாக துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் அரசாணை நிலை எண். 164, கைத்தறி, கைவினை, துணிநூல் மற்றும் கதர்த்துறை, நாள் 15.12.2010-ன்படி வேலூர் சரகம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு சரகங்களாக பிரிக்கப்பட்டு, திருவண்ணாமலை சரகம் 1.2.2011 முதல் புதியதாக துவங்கப்பட்டு திருவண்ணாமலையில் செயல்பட்டு வருகிறது.

உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வேலூர் அவர்களின் முதன்மை செயல்பாடுகள் கீழ்க்கண்ட விபரப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • புதிய கூட்டுறவு சங்கங்களை ஒருங்கிணைத்து அதன் செயல்பாடுகளை கண்காணித்து தொடர்ந்து வேலைவாய்ப்புகளை நெசவாளர் உறுப்பினர்களுக்கு அளிப்பது.
  • தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் இரகங்களை உடனுக்குடன் கோ-ஆப்டெக்ஸ் மூலமாக விற்பனை செய்யவும், கையிருப்பிலுள்ள இரகங்களை தள்ளுபடிமான்யம் மூலம் விற்பனை செய்து சரக்கிருப்பை குறைப்பது.
  • அரசால் வழங்கப்படும் தள்ளுபடி மான்யத்தை பெற்று வழங்குதல்.

ஈ).நலத்திட்டங்களை செயல்படுத்துதல்.

  1. கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம்
  2. மகாத்மா காந்தி புங்கர்பீமா யோஜனா திட்டம் / பிரதம மந்திரியின் யோஜனா ஜன்பீமா யோஜனா திட்டம் (மாநில மற்றும் மத்திய அரசுடன் இணைந்தது
  3. நெசவாளர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
  4. கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வு ஊதிய திட்டம்
  5. கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வு ஊதிய திட்டம்
  6. டாக்டர் எம்.ஜி.ஆர் நல்வாழ்வு அறக்கட்டளை திட்டத்தின்மூலம் பரிசு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்குதல்